torsdag 4. november 2010

கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு

அன்பார்ந்தீர்!
வணக்கம்.
ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தை புகுத்தவும், தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகப் பின்வரும் கருத்துகளைத் தெரிவிக்கிறோம்.

மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற்றொலிகள் வராமல் காக்க வேண்டும்.
வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம் ) ஈட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன். அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம்.
வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான்
தெலுங்கு, கன்னடம், மலையாளம் தமிழிலிருந்து சிதைவால் தோன்றின.
இனியும் தமிழைச் சிதைக்க விடவேண்டா.
உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாதுஎன செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்தியதால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது.
தற்காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார், டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருதசொற்களும் புகுந்து, தமிழ் மலையாளம் மொழி 2 என அழைக்கப்படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும் இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும்.

மேலும் செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழியியல் குறியீடுகள் போதும் எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக்கிறோம்.
1 கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை
இன்றி இயங்கும்.

2 ஐந்து எழுத்தால் ஆன பாடை இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத்
தேவை இல்லை. மொழி இயலார் பயன்படுத்தும் IPA (International Phonetic alphabets)
ஐப் பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக்காட்ட இயலும். அப்படி
இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்?

3 இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங்குறியீடுகள் ...தமிழ்
எழுத்துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த
எழுத்துகள் வலிந்து நுழைக்கப் படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.

4 கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு வன்புணர்ச்சிக்கு ஈடாகும். தமிழ்த் தாய்
சீர்குலைப்புக்கு ஏதாகும் .

இப்படி இன்னும் அடுக்கிகொண்டே போகலாம். எப்படி இருப்பினும்,
கிரந்த எழுத்துகளின் படையெடுப்பை முறியடிக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு
மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.

ஆகவே, மாண்புமிகு முதல்வர் முத்தமிழரிஞர் அவர்கள் தலைமையில் கூடும் அறிஞர்கள் கூட்டம் கிரந்த எழுத்துத் திணிப்பை முற்றிலும் தடுத்து நிறுத்துமாறு கரம்
குவித்து வேண்டிக்கொள்கிறோம்

இவண்
தமிழ்க் காப்பு அமைப்புகள்